இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியது.
இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பாக வழங்கப்பட்ட இந்த உபகரணம் 2026 ஜூன் 16 அன்று அக்குரகொடையி உள்ள இராணுவத் தலைமையகத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களால் பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் பங்குபற்றினார்.
விழாவில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா:
இந்த நன்கொடையானது இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவின் மற்றொரு விளைவு என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பானது, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தாண்டி, பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்குதல் என விரிவடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளையும் உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார்.
அந்த நடவடிக்கையில், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேடுதல்,மீட்புப் பணிகள், மருத்துவ உதவி,உட்கட்டமைப்பு புனரமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சு சார்பாக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த, இந்த நல்வாய்ப்பில் இந்திய அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்ததோடு இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார மீட்பு செயல்முறைகள், திறன் மேம்பாடு,பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட சவாலான காலங்களில், இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்துள்ளது என்றார்.
