நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் கப்பல் இலங்கை வந்தது!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான சீஃபிரண்டியர் எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெட்ரோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல், 2,800 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளன.