அசாம் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளாகி ஐவர் பலி!

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படை வீரர்கள் ஐவர் உயிரிழந்தனர்.

விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் வீரர்கள் ஐவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அசாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் வழக்கமான பயணத்தின்போது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் ஆரம்பகட்ட விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆரம்பகட்ட முடிவுகள் வரும் வரை ஊகங்களைத் தவிர்க்குமாறு இந்திய விமானப் படை கேட்டுக்கொள்கிறது. உயிரிழப்புகளுக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, துயரமான இந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.