வாழைச்சேனை அரபுக் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா

வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யாஹ் அரபு கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (06.06.2026) மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.ஹாமிது ஸதகா மற்றும் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரது கூட்டுத்தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம்.றிஸ்வி கலந்து கொண்டார்.

அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.சி.ஏ.நாஸர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி, காத்தான்குடி ஜாமி அதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் செயலாளர் கவிமணி அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புஹாரி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாயல்களின் நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2018ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டுவரை எட்டு வருடங்கள் மௌலவி பட்டம் பெற்ற எண்பத்து மூன்று அல் ஆலிம் நஹ்ஜி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் குர்ஆனை மனனம் செய்த அறுபத்து மூன்று பேர் அல் ஹாபில் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ். ஆர். இரவீந்திரன்