சர்வதேச சமாதான நடை பயணம் இன்று தம்புள்ளையில் ஆரம்பம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறும். இன்று காலை 6.30இற்கு இந்த அமைதி நடை பயணம் ஆரம்பமானது.

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடை பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அந்தப் பயணமே தற்போது இலங்கையில் ‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடை பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.

இந்த அமைதி நடை பயணத்தில் ‘ஆலோகா’ எனும் நாயும் தேரர்களுடன் இணைந்துள்ளது.

இந்த நடை பயணம் இன்று மாத்தளை அலுவிஹாரை வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.