இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஆறுநாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
அவர் புதுடெல்லியில் சனிக்கிழமை (அக்டோபர் 11) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்.
“இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரைச் சந்தித்தேன். இந்திய-அமெரிக்க உறவு குறித்தும் உலகளவில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம். அவருடைய புதிய பொறுப்பிற்காக வாழ்த்து தெரிவித்துக்கொண்டேன்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 9 முதல் 14 வரையிலான ஆறுநாள் பயணத்தில், திரு கோருடன் அமெரிக்க மேலாண்மை, வளங்களுக்கான துணை அமைச்சர் மைக்கல் ஜே ரிகாசும் இந்தியா சென்றுள்ளார்.
உத்திபூர்வ, வணிக உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் பணியாற்றிவரும் வேளையில் அவர்களின் இப்பயணம் இடம்பெறுகிறது.
வணிக உடன்பாட்டை இறுதிசெய்யவும் தொழில்நுட்பம், தற்காப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தேவையான வழிமுறைகளை இருதரப்பும் ஆராய்ந்து வருகின்றன.
தாம் தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகளைப் பின்னர் ஒருநாளில் திரு கோர் முறைப்படி வழங்குவார் என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் திரு கோரைச் சந்தித்தார்.
