மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியதாக அந்நாட்டின் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் சனிக்கிழமை (அக்டோபர் 11) செய்தி வெளியிட்டது.
அணிவகுப்பை வடகொரியத் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
அணிவகுப்பின் சிறப்பு அம்சமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்றது.
வடகொரியாவை ஆளும் கட்சி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதைக் கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சீனப் பிரதமர் லீ கியாங், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டுமிட்ரி மெட்வெடேவ் தலைமையிலான ரஷ்யப் பேராளர்க் குழு, வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோ லாம் முதலியோர் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அணிவகுப்பை நேரில் கண்டு களித்தனர்.
அணுவாயுத ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றான வடகொரியா அதன் அதிநவீன ஹுவாசோங்-20 ஏவுகணையை உலகிற்குக் காட்டியது.
