கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை!

கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை! என்று கல்கிஸை நீதிமன்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசி மூலம் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக காட்டியுள்ளது. 

அதில் அவர், “பிரியந்த எனது ஜூனியர் பேட்ச்…”, “பிரியந்தவிடம் சொல்லுங்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள்…”, “பிரியந்தவிடம் என்னை அழைக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் பிரியந்தவின் நம்பரைத் தாருங்கள்…” என்று கூறுவது அந்த காணொளி காட்சிகளில் காணப்படுகின்றது. 

இதன் மூலம், குறித்த சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை நேரடியாக அழைத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர். 

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சட்டத்தரணிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது