கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது.
கடந்த 9 வருடங்களாக ஊடகத்துறையில் பல தடைகளையும் கடந்து தனித்துவமான இடத்தை தன்னுடைய திறமைகளால் தக்கவைத்திருக்கும் இளம் துடிப்புள்ள ஊடகவியலாளராக வலம் வருகிறார்.
கிராமத்தில் பிறந்தாலும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வானொலியிலும் தடம் பதிக்கலாமென நிரூபித்திருக்கிறார் கிலசன்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில் கொண்ட காதலால் 2016ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் அறிவிப்பாளராகவும் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தாய் தந்தையினுடைய ஆசிகளோடும் துணைவி பவித்ராவின் ஒத்துழைப்போடும், பல நல்லுள்ங்களின் ஆசிகளோடும் ஆதவன் வானொலி, தாளம் எப்.எம், புன்னகை வானொலி, கனேடியத் தமிழ் வானொலி ஆகியவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியதோடு கல்முனை நெற் ஊடகத்தின் நெறியாளராகவும், பரிமாணம் பத்திரிகையின் இணையாசிரியராகவும், தமிழ்த்தந்தி பத்திரிகையில் பிராந்திய நிருபராகவும் பணியாற்றி தற்போது ஸ்கை தமிழ் ஊடகத்தின் நிருபராகவும், துணிந்தெழு சஞ்சிகையின் இணையாசிரியராக இளங்கலைஞர்களை உலகறியச் செய்வதிலும் ஊடகத்துறையில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற போதிலும் இவர் ஊடகத்துறையில் தனது பங்களிப்பை ஆற்றுவதற்காக சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகிறார்.
அத்தோடு கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஊடக இணைப்பாளராகவும் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 2019 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிறந்த அறிவிப்பாளருக்கான தேசிய விருதும், 2022இல் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் சுவதம் விருதும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றைவிட கவிதைத் துறையிலும் தனது கன்னி நூலை வெளியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். குலசிங்கம் கிலசனுக்கு இளங்கலைஞர் விருது வழங்கப்பட்டமைக்கு மதிமுரசு மனமார வாழ்த்துகிறது.




