ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கிறது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா? என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்புகிறார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (24.08.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கருப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்படப் பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விதத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது.
இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும்;. இதுவிடயத்தில் எவருக்கும் விதி விலக்கல்ல.
அதேவேளை, இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதியுடன் ஒரு வருடமாகின்றது.
இதனை முன்னிட்டு முதலாம் திகதியில் இருந்து அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பமாகின்றது.
வடக்கில் இருந்துதான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறான சூழலில் ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கிறது என்றார்.
க. கிருஷாந்தன், ஊடகச் செயலாளர்
கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சு
