இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாள்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்தத் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் சுமார் 600இற்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 20,000 மேற்பட்ட மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,
தவறும் பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
