பிரபல நடிகர் கோட்டா சீனிவாசன் காலமானார் என்ற செய்தி திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானவர்.
கடந்த 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்கிரம் நடிப்பில் வெளியான ‘சாமி’. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ எனப் பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.
நடிகர் கோட்டா சீனிவாசன் காலமானார் என்ற தகவலறிந்த திரையுலகம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றது.

