மட்டு மாநகர சபையில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம்,தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ச்சியான தீ விபத்துகள் ஏற்பட்டதன் விளைவாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன. இனிவரும் காலங்களில் இதைத் தடுக்கும் முகமாக
கடை,வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம்,தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இன்று (11) மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC),மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள், அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முதலுதவி சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது

மேலும், வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல், அவசரகாலத் தயார் நிலையை மேம்படுத்துதல்,உயிர், சொத்து இழப்புகளை குறைப்பதன் அவசியம் குறித்து மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன் விளக்கமளித்தார்.

இந் நிகழ்வின் கலந்துகொண்ட வர்த்தகர்களுடன் திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ் குமார், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ. எஸ். எம். சியாத், மாநகர சபை தீயணைப்பு பிரிவு உறுப்பினர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

எஸ். வரதராஜன்