நெல் கொள்வனவுக்காக ஆலை உரிமையாளர்களுக்கு கடன்

நெல் கொள்வனவுக்காக ஆலை உரிமையாளர்களுக்கு கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் நெல்லுக்காக விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் சிறிய,நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இத்துறையில் செயற்படும்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அவர்கள் இங்கு ஜனாதிபதிக்குத் தெரிவித்ததுடன், நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈட்டுக் கடன் முறைமையின் கீழ் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு அறிவித்தனர்

நெல் கொள்வனவு செய்வதற்காக மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர்கள் இங்கு பரிந்துரைத்ததுடன், நெல் கொள்வனவு செய்வதற்குத் தங்களிடம் போதுமான கொள்ளளவு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிலையான விலையை வழங்குவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துவதற்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் சுட்டிக்காட்டினர்.

நெல் கொள்வனவு செய்வதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் நெல் 120 ரூபா குறைந்தபட்ச விலையின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடிய அதிகூடிய நெல் அளவு ஹெக்டேயருக்கு 4,000 கிலோகிராம் ஆக இருக்க வேண்டும் எனவும், கொள்வனவு செய்யப்படும் நெல் தொகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் குறித்த சரியான ஆவணங்களைப் பேணுவது கட்டாயமானது எனவும், குறித்த அறிக்கைகள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.