'நீங்கள் ஒரு பைத்தியம்'; பெஞ்சமினை எச்சரித்த டிரம்ப்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,”நீங்கள் ஒரு பைத்தியம்; நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் ஆயுதக்குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடர்ந்த நிலையில், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் திங்கட்கிழமை அறிவித்தது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்த உரையாடலின்போது, டிரம்ப் மிகவும் கோபமாக பேசியதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ”நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள். இதன் காரணமாகவே, இஸ்ரேலையும் அனைவரையும் வெறுக்கிறார்கள்” என்று பேசியதாக ஆக்சியோஸ் நிறுவனத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, “அனைத்துவிதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும்” டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டிரம்ப்புடனான உரையாடலை உறுதிசெய்து நெதன்யாகு வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”இஸ்ரேல் நகரங்களையும், மக்களையும் தாக்குதவதை ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் தாக்கும் என்று டிரம்ப்பிடன் தெரிவித்தேன்.
எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதே சமயம், தென் லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.