கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தினையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 18.04.2026 அன்று காலை 7மணி தொடக்கம் 19.04.226 அன்று மாலை 4மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற்றது
கும்பாபிசேகம் உட்பட கிரியைகள் கொழும்பு பாணந்துறை ஸ்ரீ கந்தசாமி ஆலய பிரதம குரு கிரியாகிரம ஜோதி பிரம்ம ஸ்ரீ இ. ஜெகதீச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டன.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் புண்ணியாவாசனம் கிரியைகள் வேத உபசாரங்கள் ஆரம்பமாக பிரதான கும்ப பூஜை,விசேட யாக பூஜைகள் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆலய பரிபாலன மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு பக்தி பூர்வமாக வானத்தில் கருடர்கள் வட்டமிட கும்பாபிசேகம் இடம்பெற்றது
அதனைத் தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தி மற்றும் பரிபாலன மூர்த்திகள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அப்போது ஆலயத்தில் தசமங்கல தரிசனம் இடம் பெற்று கும்பாபிசேக சிவாச்சாரியர்களினால் ஆசியும் வழங்கப்பட்டது.
எஸ்.வரதராஜன் – மட்டக்களப்பு






