சமையல் எரிவாயு இன்றி சிரமப்படும் நுவரெலியா மாவட்ட மக்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் 27ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திக்வா புயல் காரணமாக நுவரெலியா மாவட்டமும் பாரியளவு அழிவுக்குள் உள்ளானதே. அந்த வகையில் மாவட்டத்திற்கான போக்குவரத்து வீதிகள் பல துண்டிக்கப்பட்டன.

அதற்கமைய கண்டி – நுவரெலியா பிரதான வீதி முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் . நுவரெலியா முதல் தவலந்தன்னை முறையான இடங்களுக்கு செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

குறித்த பேரழிவு ஏற்பட்ட தினத்திலிருந்து இன்று வரை பம்பரகலை, டொப்பாஸ், குடோயா, லபுகலை , கொண்ட கலை, வெதமுள்ள, பலாகொல்ல, ரம்பொட, தவலந்தென்னை புஸ்ஸலாவ ஆகிய பகுதிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றுவரை விநியோகிக்கப்படாததன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் அங்கு எரிவாயு சிலிண்டர்கள் இல்லை. அந்தப் பிரதேசம் மற்றும் அதனை சூழ உள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் பெருந்திரளான குடும்பங்கள் நுவரெலியா மற்றும் புசல்லாவ நகரங்களுக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி ரூ. 3,500 – ரூ. 4,500 வரை செலவு செய்து சிலிண்டர்களை கொண்டு வரவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் கண்டி நுவரெலியா வீதி பழுதாகியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த வீதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பி உள்ளதாகவும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாத்திரம் பயணிப்பதில் உள்ள சிக்கல் என்ன என்பதையும் பொதுமக்கள் வினவுகின்றனர்.

எனவே பிரதேசங்களில் வாழும் மக்களின் நலன் கருதி இந்த பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை துரிதக் கதையில் முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கௌசல்யா

Facebook