பாராளுமன்றம் நாற்பதாண்டுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படுகிறது.
இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய நாற்பத்திரண்டு வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கமைய பாராளுமன்றத்தில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு திருத்தவேலைகள் இந்நாள்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters), செப்புக் கதவு (Copper Door), பாராளுமன்ற மருத்துவ நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறு அளவிலான திருத்தவேலைகள், பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தாலும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.




