தாயும் பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக் கிணற்றில் இருந்து சடலமாக இன்று (24) மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருள்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்

அதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதைக் கண்டனர்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) தாய், மிக்சா (வயது 11) மகள் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.

தாயும் பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.