நைஜீரியாவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடத்ப்பட்ட கோரத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளது 108 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியின் மையப்பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே முதல் மனித வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அடுத்த சில நிமிடங்களிலேயே மக்கள் அதிகம் கூடியிருந்த சந்தையில் மற்றொரு குண்டு வெடித்தது.
தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் மைதுகுரி பல்கலைக்கழக ஆஸ்பத்திரி நுழைவாயிலிலும் ஒரு குண்டு வெடித்தது.
மேலும், கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் இதே போன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் படுகாயமடைந்த அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு ‘போகோ ஹரம்’ என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தப் பயங்கரவாத அமைப்பை ஒடுக்க அமெரிக்கா ஏற்கனவே வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், நைஜீரிய வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்க வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தற்போது நகரம் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
