ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்ற போதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
