பிரதமர் ஹரினி இந்தியாவிலிருந்து நாடு திரும்பினார்

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை மண்ணைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

தனது இந்திய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தாம் கல்வி கற்ற டெல்லி இந்து கல்லூாிக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (16) பல இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொண்டார். 

இந்த விஜயத்தின் ஒரு சிறப்பு நிகழ்வாக, பிரதமர் அவர் கல்வி கற்ற டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கும் விஜயம் செய்தார். 

இங்கு கருத்து தெரிவித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய, 

“இந்து கல்லூரி இப்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. அது குறித்து பெருமைப்படுகிறேன். அற்புதம். நான் முதன்முதலில் இங்கு வந்தபோது, PEPSI இந்தியாவிற்கு அப்போதுதான் வந்திருந்தது. 

அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய விடயமாக இருந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் பேசிய விதம் நினைவிருக்கிறது. வகுப்பறைகளில் மட்டுமல்ல, குறிப்பாக வகுப்பறைக்கு வெளியே புல்வெளியில் அமர்ந்து, தேநீர் அருந்திக்கொண்டே பேசியிருந்தோம். 

இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியம், விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பொதுவான பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. 

சில சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் உடன்படாமல் இருக்கலாம். ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் விரும்பாமலும் இருக்கலாம். அதுதான் ஒரு குடும்பத்தின் இயல்பு. 

உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்கும். நீங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்யவும், வாழவும் கற்றுக்கொள்கிறீர்கள். நாள் முடிவில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறீர்கள். 

இந்தியா எப்போதும் இலங்கையின் பயண வழியில் மாறாத பங்காளியாக இருந்து வருகிறது. எமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து, நெருக்கடியான காலங்களில் அத்தியாவசிய உதவிகளை வழங்கி, நாங்கள் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் அடையும்போதும் எங்களுடன் நின்றது. 

2022 ஆம் ஆண்டில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, இந்தியா எமக்கு கடன் வசதிகள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்றார்.