மருந்து என்ற போர்வையில் 14 கோடிக்கு நச்சுத்திரவம் கொள்முதல்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 144 மில்லியன் ரூபாய் பெறுமதியில் மருந்து என்ற போர்வையில் நச்சுத்திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை ஜேர்மன் ஆய்வுகூடப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியாவும் உப்பு நீரும் இருந்தமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செல்வி லக்மினி கிரிஹாகம நேற்று (19) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, உலக சுகாதார அமைப்புடன் இணைந்த ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான் லோச்சனி ஆபேவிக்கிரமவிடம் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
