திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி விபத்தில் இன்று (மே 5) காலமானார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 99 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு அடிபாபம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து நாட்டாமை, பூவே உனக்காக, ஆனந்தம், சேரன் பாண்டியன், லவ் டுடே, நீ வருவாய் என, புன்னகை தேசம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். திருப்பாச்சி, ஜில்லா, கச்சேரி ஆரம்பம், மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருது, மாநில அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது பொன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருக்கு ஜித்தன் ரமேஷ், ஜீவா, சுரேஷ், ஜீவன் என 4 மகன்கள் உள்ளனர்.