திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்தமைக்காக வலயக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்ப் பெறுபேறுகளில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இம்முறை 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் 91.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இம்மகத்தான சாதனையைப் பாராட்டி அம்பாறை மாவட்டம், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்:
பெருமதிப்பிற்குரிய வலயத்தின் அதிபர்களே, ஆசிரியர்களே!
2026 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, திருக்கோவில் கல்வி வலயம் இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையை நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள் என்பதைப் பெருமகிழ்வோடு இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.
169 மாணவச் செல்வங்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் 91,8 ஆக உள்ளது,
இது சாதாரண சாதனை அன்று. அபரிமிதமான உங்கள் அர்ப்பணிப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி!
இதற்காக அரும்பாடுபட்ட ஆசிரியர் பெருந்தகைகளுக்குத் தலை வணங்குகிறேன், அவர்களை வாழ்த்திப் பாராட்டுவதோடு; இதைச் சரியான முறையில் திட்டமிட்டு வழி நடத்திய அதிபர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
மேலும் இம் மகத்தான சாதனைக்குப் பின்புலமாக நின்று, இரவு பகல் பாராது அரும்பணியாற்றிய நமது வலயத்தின் ஆரம்பக் கல்வி பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அம்ஜத் கானுக்கும், கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளர் நசீர், பொது முகாமைத்துவப் பணிப்பாளர் சுரனுதன், கல்வி திட்டமிடல் நௌபடின், கல்வி நிர்வாக பணிப்பாளர் நபீஸ், கணக்காளர் லிங்கேஸ்வரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான கங்காதரன், செல்வம், ரி. உதயகுமார், ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்,
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த பெற்றோர்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும்,
கல்வி உலகில் மகத்தான சாதனைகளைப் புரிந்துவருகின்ற உங்கள் அனைவரதும் சேவையும் ஆற்றலும் தொடர்ந்து பெருக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்து, திருக்கோவில் கல்வி வலயம் மேலும் மேலும் சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன் .
உங்கள் அனைவருக்கும் என் நன்றி!
இரா. உதயகுமார்
வலயக்கல்விப் பணிப்பாளர்
திருக்கோவில்
