மட்டக்களப்பில் சாதனைப் பெண் தொழில் முயற்சியாளருக்கு விருது

மட்டக்களப்பில் சாதனைப் பெண் தொழில் முயற்சியாளருக்கு தேசிய மகளிர் தின விருது வழங்கப்பட்டது.

மட்டக்களப்பில் சாதனைப் பெண் தொழில் முயற்சியாளருக்குத் தேசிய மகளிர் தின விருது வழங்கும் நிகழ்ச்சி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திரசேகரம் அருணாளினி ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (03) இன்று நடைபெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் இலங்கைப் பெண்கள் பணியகத்தினால், மகளிர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு பிரதேச செயலக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் தினம் 2026 முன்னிட்டு, “பெண்களின் தலைமையில் – செழிப்பான தேசத்தின் பெருமை” என்ற தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனைமிக்க தொழில் முயற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.

பெண்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் இவ்வாறான கௌரவிப்புகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிட்டது.

இப் போட்டிகளில் முதலாம் இடத்தினை அலங்காரத் தாவர வளர்ப்பிற்கு திருமதி ஜெயவாசன் மேரி டயனா பெற்றுக் கொண்டதுடன், இரண்டாம் இடத்தினை ஷியா ஆடை உற்பத்தி நிறுவன நிறுவுனர் எம்.ரீ. ஏ. இசட். ஷஹ்ரா, மூன்றாம் இடத்தினை ட்றிம் கேக்ஸ் அன்ட் கிளாஸ் நிறுவுனர் திருமதி நுஸ்பா சஜாத் அவர்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ், மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி இணைப்பாளர் வி.முரளீதரன் மற்றும் பலர் கலந்து தொண்டனர்.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்