மலேசியாவில் கைதான கேடிகள் கொண்டுவரப்பட்டனர்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் கேடிகளான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட மூன்று சந்தேகநபர்கள் இன்று (10) பிற்பகல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானம் மூலம் இன்று பிற்பகல் 4:28 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓலுகல உள்ளிட்ட சிறப்பு பொலிஸ் குழுவொன்று மலேசியா சென்றிருந்தது.
இந்த மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், முக்கிய பாதாள உலகக் கேடிகளான “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் முதன்மை உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பொலிஸ் குழுவும் மலேசிய பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போதே, தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உள்ளிட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
