சட்டப்பேரவை நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் என 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது, மாநில அரசு – மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதைக் காட்டுவதாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஆளுநர் மாளிகை பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று (ஜூன் 18) என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று (18) வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.
மேலும், முதல் முறையாக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
