பார் தகராற்றில் இலங்கைப் பெண் கார் ஏற்றிப் படுகொலை!

சென்னை: சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராற்றில், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.

நிலைமை கையை மீறிச் சென்றதால், பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பாரை விட்டு வெளியேற்றினர்.

பாரை விட்டு வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை. வீதியில் வைத்து மீண்டும் இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன.

இந்த மோதலின் உச்சகட்டமாக, ஒரு தரப்பினர் ஆத்திரத்தில் எதிர் தரப்பினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் யான்சி என்ற பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது தெரியவந்துள்ளது.

யான்சியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுமிக்கும் இந்த மோதலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இந்தக் கொடூரக் கொலை,மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.