சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் இன்று (மே 15) வெளியாகுவதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வடமாநிலங்களின் ஒருசில இடங்களில் திட்டமிட்டபடி கருப்பு படம் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில், நடிகை த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

தயாரிப்பு நிறுவனம், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டிய பிரச்னையால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று பிரச்னைகள் சரி செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனிடையே படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உருக்கமாக விடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், ”ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படம் பார்ப்பதே வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்குத்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரச்னைகள் எல்லாம் சரியாகி படம் ரிலீஸாகும் என நம்புகிறேன்” எனக் கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு இன்று (மே 15) படம் வெளியாகவுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் மே 15 அதிகாலையில் அறிவித்துள்ளது.