தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பெரும்பான்மையை நிரூபித்ததையடுத்து மே 10 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மணிக்கு முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 9) மாலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு ஆதரவளிக்க திமுக கூட்டணியில் 5 எம்.எல்.ஏ.க்களை வென்ற காங்கிரஸ் கட்சி முதலில் ஆதரவு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தலா 2 இடங்களை வென்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை இன்று ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
ஆளுநர் மாளிகைக்கு அவருடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரும் சென்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் விஜய் உடன் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளனர்.
தவெக சார்பில் ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆட்சியமைக்க உரிமை கோரி ஏற்கெனவே 3 முறை ஆளுநரைச் சந்தித்து ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்யின் 4-ஆவது சந்திப்பு வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. இதற்கிணங்க மே 10 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
