ஜனாதிபதி ஒரு நல்ல மனிதர் என்றாலும் அவருடன் சில இனவாதிகளும் சேர்ந்திருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
என்னதான் இருந்தாலும் கஷ்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
துறைநீலாவணையில் இன்று (05) கள விஜயமொன்றை மேற்கொண்டு அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
துறைநீலாவணை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சு. இளமாறன் தலைமையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ் உட்பட பலர்கலந்துகொணடனர். அங்கு மேலும் உரையாற்றிய திரு.சாணக்கியன்:
இந்த நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறந்தவர். தனிப்பட்ட முறையில் அவர் நல்லமனிதராக இருக்கின்றார் அவருடன் இருக்கும் ஒரு சிலரது செயற்பாடுகள் அனுபவம் போதாத நிலையினை எடுத்துக்காட்டுகிறது
2020 பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த சாணக்கியன் இன்று பேசாமல் இருக்கின்றார் என்று சிலர் நினைக்கலாம். அன்று வெளியே அனுப்பவேண்டிய அரசாங்கம் இருந்தது.
அவர்களை வெளியேற்றுவதற்காகப் பாடுபட்டோம் இப்போது அவ்வறு இல்லை. ஜனாதிபதி சிறந்தவர் ஆனால் அவருடன் இருக்கின்ற சிலர் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டியதை இல்லாமல் செய்த இனவாதிகளும் இருக்கின்றார்கள்.
அரசியல் என்பது காலத்திற்குக் காலம் மாறும் 2020 காலப்பகுதியில் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிசெய்தார்கள்.
எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் ஆளும் கட்சியே செய்யவேண்டும் என்ற அடக்குமுறையுடன் ஆட்சிசெய்த அவரை மக்கள் துரத்தியடித்து நாட்டைவிட்டு வெளியேறச் செய்தனர்.
இவ்வாறுதான் அரசில் நாம் பொறுத்திருந்து பார்ப்போம். எங்களது மக்கள் எம்மோடு இருக்கும்வரை களத்தில் இருந்து செயற்படுவோம்.
எந்தத் தேர்தலாக இருந்தாலும் தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சியுடனே இருப்பார்கள் சோரம் போகமாட்டார்கள் என்பது எமது பாட்டன் இராசமாணிக்கம் அவர்களது காலத்தில் இருந்து பறைசாற்றி வருகின்றார்கள்.
இந்நாட்டினது நலனைக் கருத்தில் கொண்டு கஸ்;டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட ரா ஜபக்ச குடும்பத்தினை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் அனுமதிக்கமுடியாது
இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடியும் விலவாசி உயர்வும் காணப்படுகிறது என்பதற்காக இந்த ஜனாதிபதியைத் துரத்திவிட்டு நாமல் ராஜபக்சவைக் கொண்டுவருவதா?
அவ்வாறு செய்ய முடியாது. துரத்தப்பட்டவர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிசெய்யவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு உலக நாட்டில் ஏற்படும் யுத்தம் ஒருகாரணமாக அமைந்துள்ளது என்றார்.
சா. நடனசபேசன், மட்டக்களப்பு



