வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையைத் தொடங்கினார்.

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம். ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசத் தொடங்குவதற்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி உரையைத் தொடங்கினார். பிரதமர் மோடி வெற்றிவேல் எனக் கூற, கூடியிருந்த தொண்டர்கள் வீரவேல் என முழங்கினர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார்.

முதன்மையாக மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தலை தாழ்ந்து வணங்குகின்றேன் எனக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார். இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி.

இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் வியப்பை ஏற்படுத்தும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்.

நீதிக்கும் கண்ணியத்துக்கும் போராடிய இமானுவேல் சேகரனையும் நினைவு கூர்கிறேன் எனக் குறிப்பிட்டு பின்னர் பேசத் தொடங்கினார்.