கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கிவருகின்றன.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பெரும்போக நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக போரதீவுப்பற்று கொக்கட்டிச்சோலை நாவிதன்வெளி அக்கரைப்பற்று உட்பட பல விவசாயப் பிரதேசங்களில் அறுவடைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக போரதீவுப்பற்று, கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றது.
எனினும் (12.02.2026)ஆம் திகதி காலை முதல் பெய்து வரும் மழையினால் அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
வீதியோரங்களிலும் திறந்த வெளி மைதானங்களிலும் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்துள்ளதால், அவை முளைக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பெய்து வரும் கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகியுள்ளது.
சா. நடனசபேசன்



