பரீட்சை மண்டபம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாமல் மாணவர்கள் அவதி!

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப பரீட்சை நிலையம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் கொட்டும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை மட்டக்களப்பில் ஏற்பட்டது.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமான கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரிட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டது.

ஆலயங்களுக்குச் சென்று இறை ஆசீர்வாதத்தின் பின்னர் பெற்றோர்களுடன் பரிட்சை நிலையத்திற்குச் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் வருகை தந்த போது பரீட்சை எழுத விருத்த மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நேரத்திற்குப் பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கொட்டும் மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலத்த அசௌரியங்களை எதிர்நோக்கினர்

இருந்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உரிய நேரத்திற்குப் பாடசாலைக்குச் சமூகம் தந்த மாணவர்கள் பொறுப்பான அதிகாரிகள் தேவையான முன்னாய்த்த நடவடிக்கைகளை நேர காலத்துடன் முடிக்காத காரணத்தினால் உரிய நேரத்திற்குப் பரீட்சை மண்டபத்திற்குச் செல்ல முடியாமல் காத்திருந்தனர்.

மட்டக்களப்பு வரதன்