மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் ஏற்பாட்டில் பிராத்திய சுகாதார சேவைகள் மாநாட்டு மண்டபத்தில் (09) இடம் பெற்றது.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தரவுகளை சேகரித்து புதிய செயலி மூலம் கண்காணித்து தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்குதல் தொடர்பாகவும் புற்றுநோயை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கதிரியக்க அதிகாரிகளின் பற்றாக்குறை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் எதிர்காலத்தில் புதிய புற்றுநோய் ஆய்வுகூடங்களை அமைத்து தடையின்றி சேவை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது
மாவட்டத்தில் அதிகளவான நபர்கள் புற்று நோயிலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுவதனை முன்னிட்டு புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையினால் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், தாய்சேய் வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், துறை சார் நிபுணர்கள், மட்டக்களப்பு புற்றுநோய் சங்க உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பிராத்திய சுகாதார பணிமனை இணைந்து புற்றுநோயை தடுப்பதற்கான பல செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
சா. நடனசபேசன்



