மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலயில் 2026 இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பருவப் பெயர்ச்சி மழை பெய்துவரும் இந்நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு தாக்கம் காரணமாக இவ்வாண்டின் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம்; 4ஆந் திகதி வரையும் 13 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாரம் வரை டெங்கு தாக்கத்தினால் அதிகளவு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர் பாதிப்புக்குள்ளானதுடன் செங்கலடி பிரதேசத்தில் 03 பேரும், கிரான் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 நபர்களும், வாகரை, வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 13 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இவ்வாண்டின் முதல்வாரத்தில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தவபாலசூப்பிரமணியம் சரவணன்; மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் 71 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுமுள்ள மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சா. நடனசபேசன்