சுமந்திரன் சாணக்கியன் தாளத்திற்கு ஆடுவதற்குத் தமிழ் மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திற்குக் காணி வழங்கிய பாவிகள் இன்று பொய்க் கூச்சல் இடுவதாகவும் அமைச்சர் சாடினார்.
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என்றும் கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன், ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் காணி உரிமச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான வைபவம் நேற்று புதன்கிழமை (13) காணிப் பத்திரம் வழங்கும் “உரிமை” வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி, நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள்,
சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர்:
” காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கில் இருந்தே ஆரம்பித்துள்ளோம். வடக்கு மக்களின் வாழ்வில் என்று வசந்தம் வீசுகிறதோ அன்றுதான் எமது வாழ்விலும் வசந்தம் ஏற்படும். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கம்.
சுமந்திரனுக்கு ரணிலுடன் இருக்கும்போது நன்றாக இருந்தது. யாழ். நூலகத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்கு தெரியவரவில்லை.
ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார்.
மட்டக்களப்புவில் 10, 15 பேரை அழைத்துச் சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்தவர்.
இவர்களின் தாளத்திற்கு ஆடுவதற்குத் தமிழ் மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர்.
அதேவேளை, கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணி, விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
‘மன்னாரில் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள கனிய மணல் அகழ்வு இடம்பெறுகின்றதாம். இதனால் மக்களின் காணிகள் சூறையாடப்படபோகின்றதாம் என்று ரிஷாட் பதியுதீன் கொக்கரிக்கின்றார்.
காற்றாலை மின் உற்பத்திக்குக் கடந்த காலங்களில் இந்த பாவிகள்தான் காணி வழங்கினார்கள்.
அதற்குரிய அனுமதியையும் இந்தப் பாவிகளே வழங்கினர். கனிய மணல் அகழ்வுக்கும் ராஜபக்ச, ரணில் ஆட்சியில் அமைச்சராக இருந்த பாவிகள்தான் அனுமதி வழங்கினர் எனவும் அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.
க. கிருஷாந்தன், ஊடகச் செயலாளர் – கடற்றொழில், நீரியல்வள அமைச்சு



