செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!,
யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொதுமக்கள் எனப் பலர் கலந்துக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன்போது போராட்டகாரர்கள், பேரணியாக முன்னோக்கி நகர முற்பட்ட வேளை, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போராட்டக்களத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன..
செம்மணிப் புதைகுழியில் இருந்து நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட எஸ்-25 என அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதி சுமார் 4 முதல் 5 வயதுடைய பிள்ளையுடையது என்று நீதிமன்றில் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

