கரப்பான் பூச்சியை சுட இந்திய நாடாளுமன்றத்தில் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு துணை இராணுவப் படையினர் தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதிப் பேரணி நடத்த சிஜேபி கட்சி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.
இதனிடையே, பொதுப் பாதுகாப்பு கருதி தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தில்லி நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலைகளை தடுப்புகள் மூலம் மூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர், பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்தப்பட்டது. சிலரை குண்டுக்கட்டாக காவல்துறையினரும் மத்திய ஆயுதப் படையினரும் கைது செய்தனர்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: உண்ணாவிரத போராளி பலவந்தமாக மருத்துவமனையில்
இதனிடையே, சிஜேபி போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கரப்பான் பூச்சியை சுட இராணுவம் தயாராகவே உள்ளது.
மேலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் சிறப்பு அதிரடிப் பிரிவும் நவீன ஆயுதங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை நாடாளுமன்ற கதவுகளை தகர்த்து, போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அவர்கள் தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
