40 நாடுகளிலிருந்து இலங்கை வர இன்று முதல் இலவச வீசா

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளின் ராஜதந்திர, உத்தியோகபூர்வ, சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சுற்றுலா விசாவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மேலே குறிப்பிடப்பட்ட 40 நாடுகளின் பிரஜைகள், இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள மாலைதீவு, சீஷெல்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இணையவழி மூலமான மின்னணு பயண அனுமதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.