புனித ஹஜ் கடமை நிறைவேற்ற முதல் குழு நேற்றிரவு பயணம்

புனித ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து செல்கின்ற முதலாவது குழுவை வழியனுப்பும் வைபவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (01) இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹ்லார், விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எச்.எம். அம்ஜடீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் குழுவில் 07 ஹஜ் முகவர்கள் மூலமாக 325 பேர் பயணமாகினர். சவூதியிலிருந்து விசேடமாக வந்த சவூதி ஏயார் லைன்ஸ் விமானத்தில் இரவு 09.05 மணிக்கு இவர்கள் ஜித்தா நோக்கிப் பயணமாகினர்.

இலங்கையிலிருந்து இவ்வாண்டு 3,500 யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.