ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த 2 கப்பல்கள் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பனாமா நாட்டு கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே கிழக்கு திசையில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலுக்குப் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் பயணித்த 14 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கடல்சார் நிர்வாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறிது நேரத்திலேயே டோகோ நாட்டு கொடியுடன் பயணித்த கச்சா எண்ணெய் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த கப்பல் மற்றும் பயணித்தவர்களின் நிலை தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.