கடலில் கொள்கலன்கள் மிதப்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில்,நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விபத்து வட அட்சரேகை 06 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலில் கொள்கலன்கள் மிதப்பதால் குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் நெடுநாள்,சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
