மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

தற்போதைய எல் நீனோ காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சீர்செய்யும் வகையில் புதிய திட்டங்களுக்கு இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில்

நீர்வழங்கல் வடிகாலமைப்புசபைக்கு அனுமதிகளை வழங்கியுள்ளதாக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசுகளினால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிகபட்சமான தொகை இந்த ஆண்டே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, இந்த 2026 ஆம் ஆண்டிற்கு நாம் 10,455 மில்லியன் ரூபாய் செலவில் 2,573 திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். சமீப காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசின் மூலம் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதித் தொகை இந்த ஆண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் 204 திட்டங்களுக்காக 60 மில்லியன் ரூபாயும், 10 பாலங்களுக்காக 243 மில்லியன் ரூபாயும், 43 கிராமிய வீதிகளுக்காக 250 மில்லியன் ரூபாயும், பிரஜாசக்தி திட்டத்தின் 127 பணிகளுக்காக 666 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு வீடற்றவர்களுக்கு 272 வீடுகளைக் கட்டித் தந்த நிலையில், இந்த ஆண்டு அதனை 521 ஆக உயர்த்தி, அதற்காக 1,064 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம்.

சிறப்புத் திட்டமாக, கிராமப்புறங்களிலுள்ள சிறு தொழில்முனைவோருக்கும் பெண்களுக்கும் தங்களது வீடுகளிலேயே பண்ணைகளை அமைத்துக் கொள்வதற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப் பண்ணைகள் மூலம் கிடைக்கும் முட்டைகளை, அக் கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தைச் சீரமைப்பதே இதன் நோக்கமாகும்.

இதுதவிர, மாகாண சபையின் கீழ் 608 திட்டங்களுக்காக 2,699 மில்லியன் ரூபாயும், பல்வேறு அமைச்சுக்கள் மூலம் 1,041 திட்டங்களுக்காக 4,528 மில்லியன் ரூபாயும், 15 வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்காக 804 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் தீர்மானத்தின்படி, பிரதான திட்டமாக கிரான் பாலத்தைக் கட்டுதல் உட்பட 5 பாலங்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களப்பில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதன் நீர்த்தேக்கப் பகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக இக் களப்பு தூய்மைப்படுத்தப்படாததால், சிறிய மழையின் போதும் பகுதி வெள்ளத்தில் மூழ்குகிறது. இதற்கான வடிவமைப்புப் பணிகளை விவாதிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 7,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான நமது திட்டங்கள் அனைத்தும் 100வீதம் முழுமையாகச் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றிகள்.

இருப்பினும், வனப்பகுதி எல்லைப் பிரச்சினை மற்றும் அதற்குரிய போதிய வளங்கள் இல்லாத நிலை இன்னமும் நிலுவையில் உள்ளது.

மேலும், 96 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி அமைக்கும் பணியை இந்த ஆண்டிற்குள் முடிப்போம் என நம்புகிறோம்.

அதேபோல், மயிலத்தமடு பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலத்திற்காக ஒதுக்கப்பட்ட 1,570 ஏக்கர் காணியை உறுதியாகப் பிரித்தளித்து, அதனை மகாவலி அதிகாரசபைக்கு வழங்கி முறைப்படி அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணிகளின் உரிமை குறித்த சான்றுகளைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 வரை அளிக்கப்பட்ட அவகாசத்திற்குப் பிறகு யாரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிமைகளை முறைப்படுத்தி வழங்குவது நமது பொறுப்பாகும்.

வரவிருக்கும் ‘எல் நினோ’ சூழலால் மட்டக்களப்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. தற்போதே உன்னிச்சை மற்றும் வாழைச்சேனை சுத்திகரிப்பு நிலையங்களின் கொள்ளளவு போதாமல் உள்ளது.

எனவே, கோரளைப்பற்று வடக்கு, வாகனேரி குளம் மற்றும் போரதீவுப்பற்று பகுதியில் உள்ள ஹெமுத்துருவ குளம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் புதிய குடிநீர்த் திட்டங்களைத் தொடங்குவதற்கும்,

அக் குளங்களில் இருந்து நீரைப் பெற்று சுத்திகரித்து விநியோகிப்பதற்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த அபிவிருத்தி கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு- எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன் ஞானமுத்து ஸ்ரீ நேசன் வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும்

மாகாண அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மட்டு மா நகர சபை முதல்வர் ஆணையாளர் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு வரதராஜன்