கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் வீடொன்றிலும் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

கனேடிய நேரப்படி நேற்று (10) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 அளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகக் கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

பாடசாலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு சம்பவம் அருகில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தாக்குதலின் பின்னணியில் உள்ள திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த உடனே அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாணவர்களும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் அம்யூலன்ஸ் மூலம் அவசரமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, தாக்குதல்தாரி பழுப்பு நிற முடி மற்றும் அதே நிறத்திலான ஆடையை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கனடா வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.