ஹஜ் செல்வோருக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்!

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ்ஜூக்கு செல்லவுள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்பே சவூதி அரசாங்கம் விசா வழங்குவதாக சவூதி அரசின் ஹஜ் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மிகப் பாரதுரமான ஆறு நோய்கள் தொடர்பில் அரச மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிஹ்லார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

இலங்கையிலிருந்து ஹஜ் செல்பவர்களது மருத்துவச் சான்றிதழ்களை கண்காணிப்பதற்காக எமது கமிட்டியினால் வைத்திய அதிகாரி சிஹான் என்பவரை நியமித்துள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளிலேயே ஹஜ் செல்லவுள்ளவர்கள் இம் முறை அரச மருத்துவச் சான்றிதழ்களை பெறல் வேண்டும்.

அச் சான்றிதழ்கள் எமது வைத்திய அதிகாரியின் ஊடாக பரிசீலனை செய்யப்படும். சவூதி அரசின் பின்வரும் கடுமையான நோய்களான புற்றுநோய், இதயத் துடிப்பு, சிறுநீரக நோய் மற்றும் கடுமையான நீரிழிவு வியாதி உள்ளவர்கள் நான்கு அல்லது 5 மாத கர்ப்பிணிமார் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பொய் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தால் அவர்கள் சவூதியில் இறங்கியபின் சோதனைகளுக்கு பின்னர் மீள அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுவர். அவர்களுக்கு ஹஜ் செய்ய முடியாமல் போய்விடும் . இம்முறை சவூதி அரேபியா ஹஜ் விடயத்தில் மிகவும் பல கடினமான நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிப்லார் தெரிவித்தார்.

எஸ். ஆர். இரவீந்திரன்