மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகையும் பயிற்சியும் மட்டக்களப்பில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்றது.

சுனாமி அனர்த்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்யாலயா பாடசாலையிலும், காத்தான்குடியில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இராணுவத்தினர், கல்வி திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி, ராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கன்னன்குடா பாடசாலையில் மாணவர்களுக்குத் தெளிவூட்டும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சுனாமி ஏற்பட்ட காலத்தில் இப்பகுதியில் கடல் நீர் வந்ததுடன் அனேகமான சடலங்கள் கரையொதுங்கியதை முன்னிட்டு இவர்களுக்கு சுனாமி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகளும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சுனாமி அனர்த்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வரதன்