நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் திருட்டு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை (01) இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.

இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தில் உள் நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய வளாகத்தை கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராவின் முழு இணைப்பையும் துண்டித்து சி.சி.டி.வி. காணொளிகளை சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் , பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்,

தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளை பதிவு செய்து ,ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

சந்தேக நபர்கள் ஆலயத்தில் உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாகவும் அவை இன்னும் கணக்கொடுக்கப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர்.