1300 வீடுகளுக்கு அடிக்கல்; 25 வீடுகளே முழுமை

மலையக மக்களின் நலன்கருதி இந்திய அரசாங்கம் 10 ஆயிரம் வீடுகள் அமைக்க 2017 ஆம் ஆண்டு முன்வந்தது. எனினும் கடந்த கால அரசாங்கங்கள் 08 வருட காலத்தில் 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய போதிலும் அதில் 25 வீடுகள் மட்டுமே முழுமையாக அமைக்கப்பட்டுளளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர். சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.

சபரகமுவ மாகாண தீபாவளி விழா இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன கீழ் வேவல்கட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அங்கு விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
சபரகமுவ மகாணசபை, இரத்தினபுரி மாவட்ட செயலகம், இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச பாடசாலைகள், உள்ளிட்ட பல அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இவ்விழாவின் மத விவகார கலாசார அமைச்சர் பேராசிரியர் இனிதும சுனில் செனவி, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஸ மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி சுனிதா எதிரிசிங்க உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் தோட்ட மக்கள் கலந்து கொண்ட அவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியாதாவது

பெருந்தோட்ட மலையக மக்கள் இன்று பல வகைகளிலும் பின்தங்கியுள்ளனர் குறிப்பாக அவர்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு நாட்டிலுள்ள ஏனைய மக்கள் போல் சம அந்தஸ்தும் சம வாய்ப்பும் கிடைக்கவேண்டும். அனால்தான் முதன் முதலாக வீடுகளில்லாதவர்களுக்கு வீடு அமைத்து கொடுக்கப்படும்.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள் அடுத்த வருடம் முடிவதற்குள் அமைத்து தரப்படும் என்பதனை இங்கு உரிமையுடன் கூறுகின்றேன்.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் முக்கிய காரணம் என்ன என்பது தாங்களுக்கு தெரியும் . மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்த நரகாசுரணை கொன்ற நாளாகும்

அதே போல மலையக மக்களை அரசியல் ரீதியாக காவல் துறை , பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக பல அசுரர்கள் உள்ளனர் அவர்களிலிருந்து மலையக மக்களை காப்பாற்ற வேண்டும்.

அது மட்டுமல்ல போதை பொருள் அரக்கனும் நாட்டு மக்களையும் தோட்ட மக்களையும் அச்சுறுத்தி வருகின்றான் அதற்கு எமது சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையிலான மக்கள் தேசிய அரசாங்கம் கூடிய விரைவில் முடிவு கட்டும்.

கட்டடங்கள், வீதிகள் அமைக்கப்படுவது மட்டும் அபிவிருத்தியல்ல மக்கள் பொருளாதார ரீதியாக கலாசார ரீதியாக, சமூக ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும்.

தோட்ட மக்கள் கேட்டதைவிடச் சம்பளம் வழங்குவோம்

இன்று நாட்டடில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுகின்றது. மக்கள் வீதியில் செல்ல அச்சப்படுகின்றனர் போதை பொருள் பாவணை பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

இதற்கு எமது அரசாங்கம் கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கும்.

அட்டன் பிரகடனத்தின் படி நாம் தெளிவாக கூறியுள்ளோம். அதன்படி காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதார உரிமை, கல்வி உரிமை என்பன வழங்கப்படுவதுடன் தோட்ட மக்கள் நாள் சம்பளமாக 1700 ரூபாயை கேட்டுள்ளனர்.

நாம் அதனை விட அதிமான சம்பளத்தை வழங்க தயாராகவுள்ளோம். என்றார்.

எஸ்.இரவீந்திரன்